Saturday, December 4, 2010

Toll ரோடு:நடப்பது என்ன ?


ஒரு நாட்டின் வளர்ச்சிக்குச் சாலைகள் மிகமிக அவசியம். அனைத்துப் பொருள்களும் உள்நாட்டின் பல பகுதிகளுக்குப் போய்ச் சேரவும், ஏற்றுமதி செய்வதற்காக விமான நிலையம் அல்லது துறைமுகங்களுக்குச் செல்லவும் அகலமான சாலைகள் அவசியம். அகலமான சாலைகள் அமையும்போதுதான், கனரக வாகனங்கள் மற்ற வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்காது என்பதால்தான் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்தியா போன்ற நாடுகளில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்குச் சாலைகளை அகலப்படுத்தும் பணியை அரசே ஏற்றுச் செய்வது, பொருளாதார ரீதியில் சாத்தியமில்லை என்பதால்தான் இதில் தனியாரை ஈடுபடுத்தும் கருத்து உருவானது. அதாவது, இந்தச் சாலைகளை அமைத்து, பராமரித்து, செலவிட்ட தொகையைக் கட்டணங்கள் மூலம் லாபத்துடன் சம்பாதித்து முடித்த பின்னர், அதை நாட்டுக்கே அர்ப்பணித்துவிட வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். "உருவாக்கு, பயன்படுத்து, ஒப்படை' என்பதுதான் இந்த தனியார்மயத்தின் தாரக மந்திரம்.

ஆனால் தனியார் நிறுவனங்கள் சாலைகள் உருவாக்கத்தில் பங்குகொண்டு, தற்போது சுங்கக் கட்டணம் என்கிற பெயரில் சுங்க வரி வசூலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவர்கள் செலவழித்த தொகை எவ்வளவு? ஒரு நாளைக்கு எவ்வளவு வசூலாகிறது. இவர்கள் முதலீட்டை லாபத்துடன் பெறுவது எப்போது? எந்த நாளில் இந்தச் சாலை சுங்கக் கட்டணம் இல்லாதபடி மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் போன்ற எந்தத் தகவலும் இல்லாமல் வாகன உரிமையாளர்கள் தண்டம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

இப்போது அரசு சுங்கங்களில் ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ. 1.40-ம், தனியார் சுங்கங்களில் ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ. 3-ம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பாகுபாடு நியாயமற்றது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மேலும், மேலைநாடுகளிலும் இத்தகைய திட்டத்தில் (உருவாக்கு, பயன்படுத்து, ஒப்படை) சாலைகள் அமைக்கப்படுகின்றன என்பது உண்மையே. ஆனால் அங்கெல்லாம் நடைமுறை என்னவென்றால், அத்திட்டத்துக்காகச் செலவிடப்பட்ட தொகை வட்டியுடன் எவ்வளவு, தற்போதைய தேதி வரை எந்த அளவுக்கு வசூலாகியுள்ளது, தற்போது அந்தச் சாலையில் ஒருவர் செலுத்திய தொகைக்குப் பின் எவ்வளவு குறைகிறது என்பதை டிஜிட்டல் கருவியில் பொத்தானை அழுத்தினாலே போதும், படிக்க முடியும். ஆனால் இந்தியாவில் அத்தகைய வெளிப்படைத்தன்மை இல்லை.

கிருஷ்ணகிரி-தொப்பூர் நாற்கரச் சாலைக்கு ரூ. 160 கோடி செலவானதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்தச் சாலையில் மாதம் ரூ. 3 கோடி வசூலாகிறது. அப்படியானால் இந்தத் தனியார் சுங்கத்துக்கு எதற்காக 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் (தமிழ்நாடு) ஆட்சேபம் செய்யும்போது, இதேபோன்று எல்லா சுங்க மையங்களிலும் வசூலாகும் தொகை, இதனால் தனியார் அடையும் லாபம் ஆண்டுக்கு சில நூறு கோடிகளாக இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, அரசு சுங்க மையங்களில் கட்டண வசூலைத் தனியாரிடம் குத்தகைக்கு விட்டுள்ளது இந்திய நெடுஞ்சாலைகள் ஆணையம். இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் பினாமிகளால் நடத்தப்படுகின்றன. இதில் வசூல்வேட்டை கோடிகோடியாய் நடந்துகொண்டிருக்கிறது. அரசுக்குப் பெரும் இழப்பு. இதுதவிர, இந்தக் கட்டண மையத்துக்கு உள்பட்ட சாலைகளில் விபத்துகள் நடந்து, குறுக்குத் தட்டிகள் உடைந்துபோனால், தடுப்புகள் சிதைந்தால் அதைச் சரிசெய்தல், நடுத்திட்டில் உள்ள செடிகளைப் பராமரித்தல் இதற்காகத் தனியாக ஒரு பில் கொடுத்து, பணத்தைப் பெறுவதிலும் ஊழல் நடந்துகொண்டிருக்கிறது. இவர்களும் பொய்யான கணக்குகளுக்குப் பணம் கேட்க, அதிகாரிகளும் அதற்கு ஒப்புதல் அளிக்க லஞ்சம் கேட்கிறார்கள்.

இத்தகைய நாற்கரச் சாலைகள் முக்கிய நகரங்களை இணைப்பதாக, தடையற்ற தனிவழியில் அமைய வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால் இவை அனைத்தையும் எல்லா ஊர்களையும் தொட்டுச் செல்லும்படியாக அமைத்து, எல்லா வாகனங்களும் கட்டாயமாக இந்தச் சாலைகளைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அவல நிலை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மட்டுமே அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும்தான் 7,600 கி.மீ. தொலைவுக்கு நாற்கரச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் முக்கியமான சாலைகள் மட்டுமே நாற்கரச் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளதால், அந்த மாநிலங்களில் ஏறக்குறைய 1,000 கி.மீ. தொலைவுக்கு மேல் நாற்கரச் சாலைகள் இல்லை.

தமிழ்நாட்டுச் சாலைகளை அகலப்படுத்தியதைப் பாராட்டுவோம். ஆனால் சுங்க வரி என்ற பெயரில் இன்னும் எத்தனை நாளைக்கு மக்களை அநியாயமாகச் சுரண்டப் போகிறார்கள்? செலவிட்ட தொகை, வசூலாகியுள்ள தொகையை மக்கள் காணும் வகையில் டிஜிட்டல் பலகையில் ஒளிரச் செய்தால் என்ன? எல்லா இடங்களிலும் ஒரேமாதிரியான சுங்க வரி நிர்ணயித்தால் என்ன?


நன்றி தினமணி

Thursday, December 2, 2010

படிக்காதீங்க! டென்ஷன் ஆகி சிரிப்பு வந்துடும்


லஞ்சம், ஊழல் ஆகியவற்றுக்கு நான் ஒரு "நெருப்பு' மாதிரி என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தனது சொத்துக் கணக்கு விவரங்களை வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் கருணாநிதி இதைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டிசம்பர் 1 வெளியிட்ட அறிக்கை:

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியில் உள்ளவர்களும், வேறு சில கட்சிகளின் நண்பர்கள் சிலரும், என்னைப் பற்றி குறிப்பிட்டுப் பேசும்போது எனது சொத்துகள் குறித்துப் பேசுகின்றனர்.

நான் ஏதோ "சல்லிக் காசு' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும், இன்றைக்கு ஆசியாவிலேயே முதல் பணக்காரனாக இருப்பதாகவும், எனது பெயரில் ஏராளமான சொத்துகளையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பது போலவும் பேசியும், எழுதியும் வருகிறார்கள்.

என்னைப் பற்றி குறை கூறுபவர்களுக்கும், அதை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் எனது சொத்துகள் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை.

வசதியுள்ள குடும்பம்: என்னதான் அவர்கள் என் குடும்பத்தைப் பற்றி குறைவாக எழுதினாலும், நான் குழந்தையாக இருந்தபோதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவுக்கும், உயர்நிலைப் பள்ளியில் படிக்க திருவாரூரில் கொண்டுபோய் சேர்க்கக் கூடிய அளவுக்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம்தான் என்னுடையது.

அதிக சம்பளம்: 1949-ல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் எழுத்தாளராகச் சேர்ந்தேன். அந்தக் காலத்திலேயே மாத சம்பளமாக ரூ.500 பெற்றேன். என்.எஸ்.கிருஷ்ணனின் "மணமகள்' திரைப்படத்துக்கு நான்தான் திரைக்கதை, வசனம் எழுத வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு சம்பளமாக ரூ.10 ஆயிரம் பெற்றேன்.

இன்றுவரை 75 படங்களுக்கு மேல் திரைக்கதை, வசனம் எழுதி சம்பளம் பெற்றுள்ளேன். 1957-ல் குளித்தலை சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றது முதல் இன்றுவரை பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப்பினராகவோ இருந்து வருகிறேன்.

"முரசொலி' நாளிதழும் எத்தனையோ ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து வெளிவருகிறது. குங்குமம், முத்தாரம், வண்ணத் திரை, "ரைசிங் சன்' ஆகிய இதழ்களும் நான் தொடங்கியவைதான்.

1967 முதல் 1969 வரை பொதுப்பணித் துறை அமைச்சராகவும், அதன்பிறகு 5 முறை முதல்வராகவும் இருந்திருக்கிறேன்.

ரூ.45 ஆயிரத்துக்கு வாங்கிய வீடு: எல்லா முதல்வர்களுடைய வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையான வீட்டில்தான் வாழ்ந்து வருகிறேன்.

சென்னை கோபாலபுரத்திலே உள்ள இந்த வீடு கூட, நான் அமைச்சராவதற்கு முன்பு ரூ.45 ஆயிரத்துக்கு வாங்கியதுதான். என் பிள்ளைகள் எல்லாம் கூட திருமணம் ஆகும் வரைதான் இந்த வீட்டிலே இருந்தார்கள். அதற்குப் பிறகு இந்த வீட்டில் இடம் இல்லாததால் சொந்தமாக வீடு வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

அரசு சார்பில் உள்ள வீடுகளில் தங்க வேண்டும் என்று அழைத்தும், தெருவில் வரிசையாக உள்ள வீடுகளில் ஒன்றில்தான் வசித்து வருகிறேன்.

வேறு எதையும் வாங்கியது இல்லை: என்னுடைய 87 வயதில் பல பொறுப்புகளில் இருந்தாலும், சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்டுகளையோ விலைக்கு வாங்கியதும் இல்லை; அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்குப் பெற்றுக்கொண்டதும் இல்லை.

ரூ.100 கோடி கிடைத்தது: முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, சன் டி.வி.யை தனியாக நடத்த விரும்புவதாக எனது பேரப் பிள்ளைகள் (கலாநிதி, தயாநிதி) என்னிடம் கேட்டனர். அவர்களின் விருப்பத்தையேற்று நானும் அதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

அப்படி பிரிந்து சென்றபோது, சன் டி.வி. தரப்பில் 2005 அக்டோபரில் ரூ.100 கோடி வழங்கினார்கள். அதற்கான வருமான வரியாக ரூ.22.52 கோடியை நான் செலுத்தியுள்ளேன். எஞ்சிய தொகையை என்னுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தேன்.

அதிலே, எனக்கும் ஒரு பங்காக ரூ.10 கோடி கிடைத்தது. அதில் ஐந்து கோடியை இருப்பு செய்து, அந்தத் தொகையைக் கொண்டு "கருணாநிதி அறக்கட்டளை' தொடங்கப்பட்டது. ஏழை, எளியோருக்கு மருத்துவ உதவியும், கல்வி உதவியும் இந்தத் தொகைக்கு கிடைக்கும் வட்டியைக் கொண்டு வழங்கப்பட்டு வருகிறது.

வங்கி இருப்பு ரூ.5 கோடி: இதில் எஞ்சிய ரூ.5 கோடியை வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தி, அதற்குக் கிடைத்த வட்டித் தொகை எல்லாம் சேர்த்து தற்போது வைப்பு நிதியாக 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 ரூபாய் உள்ளது.

நான் வசிக்கின்ற வீட்டைக் கூட மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக் கொடுப்பதாக அறிவித்தேன்.

தி.மு.க.விலே சென்னையில் முதன்முதலாக சொந்தமாக வீடும், காரும் எந்தப் பொறுப்புக்கும் வராதபோதே வாங்கியவன் என்ற பெயர் எனக்கு உண்டு.

இது என்னுடைய சொத்துக் கணக்கு. லஞ்சம், ஊழல் ஆகியவற்றைப் பொருத்தவரையில் என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு "நெருப்பு' மாதிரி!

தவறுகள் மீது நடவடிக்கை: முதல்முறையாக முதல்வராக பதவியேற்றபோது, தஞ்சையில் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனது நண்பர் தவறு செய்தபோது நடவடிக்கை எடுத்தேன். அதனால், அவர் தனது வழக்கறிஞர் பணியே செய்ய முடியாமல் ஆனது.

"மாஸ்டர் ரோல்' ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது, சட்டப் பேரவையில் மாநகராட்சி கலைக்கப்படும் என்று அறிவித்து, அவ்வாறே செயல்படுத்தியுள்ளேன்.

எனக்கு மிகவும் வேண்டிய நண்பரான கவிஞர் கருணானந்தம். அவருடைய ஒரே மகன் குலோத்துங்கனுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர ஒரு மதிப்பெண் குறைந்தது. முதல்வர் மனது வைத்தால் சேர்த்துக்கொள்ளலாம் என்று கேட்டபோது கூட நான் அதற்கு இணங்கவில்லை.

நான் இதையெல்லாம் எழுதுவதற்குக் காரணம் யாரிடமும் சான்றிதழ் பெறவேண்டும் என்பதற்காக அல்ல. என்னுடைய குணம், இயல்பு அப்படி என்பதை என் மீது குறை காண்போர் புரிந்துகொள்ள வேண்டும்.

என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார், உறவினர்கள் என அவரவர் உழைத்து ஒரு சிலர் தங்களுக்கு என வீடுகளையோ, சொத்துகளையோ வாங்கியிருக்கலாம். ஆனால், அதற்காக நான் எந்தவிதமான நிதி உதவியோ, அரசு சார்பிலான உதவியோ செய்தது இல்லை என்பதை நான் உறுதிப்பட கூறுகிறேன் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
உறவினர் சொத்து சேர்க்க உதவவில்லை...

எனது சொத்து விபரம் :
* சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீடும், வங்கியில் உள்ள ரூ.5.65 கோடி மட்டுமே என்னுடைய

சொத்துகள்.

* உயர்நிலைப் பள்ளியில் படிப்பதற்காக திருவாரூரில் கொண்டுபோய் சேர்க்கக் கூடிய அளவில் ஓரளவு வசதியுள்ள குடும்பம்தான் என்னுடையது.

* திரைக்கதை, வசனம் எழுதியதற்காக அந்தக் காலத்திலே அதிக சம்பளம் பெற்றவன்.

* தி.மு.க.விலே சென்னையிலே முதன்முதலாக சொந்தமாக வீடும், காரும் எந்தப் பொறுப்புக்கும் வராதபோதே வாங்கியவன் என்ற பெயர் எனக்கு உண்டு.

* சன் டி.வி.யில் இருந்து பிரிந்தபோது ரூ.100 கோடி கிடைத்தது. அதை எனது மகன்களுக்கும், மகள்களுக்கும் பிரித்துக் கொடுத்தேன்.

* முதல்வர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தபோதிலும், ஒரு வீட்டைத் தவிர, தோட்டங்களையோ, எஸ்டேட்டுகளையோ வாங்கியதில்லை.

* குடும்பத்தினர், உற்றார், உறவினர் தங்களது உழைப்பில் சொத்துகளை வாங்கியிருக்கலாம். அதற்கு நான் எந்தவிதமான நிதி உதவியோ, அரசு சார்பிலான உதவியோ செய்தது இல்லை.


--------------
நான் என்ன சொன்னாலும் கேட்டுட்டு நமக்கே ஒட்டு போடும் கூட்டம் இருக்கும் வரை தினசரி ஒரு அறிக்கை வெளியிடுவேன் -இது திருக்குவளை மனசாட்சி

---
நன்றி தினமணி

Monday, November 29, 2010

டாட்டா :எது வாழ்வின் அடிப்படை உரிமை?


மக்கள் பணத்தை சுரண்டும் தொழில் அதிபர்கள் பட்டியலில் டாட்டா நிறுவன அதிபரும் தற்போது வெட்ட வெளிச்சமாக தனது உரையாடல் மூலம் சேர்ந்துள்ளார்.

"வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன் ஆலோசனை நிறுவனத் தலைவர் நீரா ராடியாவுடன் தான் உரையாடியதை பதிவுசெய்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தனிமனித உரிமை உள்ளிட்ட வாழ்வின் அடிப்படை உரிமைகளை இந்த உரையாடல் பதிவு விவகாரம் பாதித்துள்ளதாக டாடா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். "

மக்கள் பணத்தை உயர் பதவி அமைச்சர் ,ஊடகம் என்ற பெயரில் பணத்துக்காக எதுவும் செய்ய துடிப்பவர்களுடன் சேர்ந்து டாட்டா நிறுவனத்தை வளர்ப்பது தான் அடிப்படை உரிமையோ ?

நன்றி தினமணி

Friday, October 15, 2010

தென் திருப்பதியில் வழிப்பறி?

புரட்டாசி மூன்றாம் சனி அன்ன்றைக்கு பெருமாளை தரிசனம் செய்தால் நல்லது என்று நவதிருப்பதி கோவில்களுக்கு குடும்பத்துடன் புறப்பட முடிவுசெய்தோம்.

அதன்படி நவ வரிசைப்படி ஒவ்வொரு திருத்தலங்களாக தரிசித்து வந்தோம்.இந்த ஒன்பது கோவில்களில் ஏழு கோவில்களில் கட்டணம் செலுத்தி மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது .இலவச தரிசனங்கள் இந்த கோவில்களில் இல்லை.மூலவர் தரிசனம் 2 ரூபாய் , சிறப்பு தரிசனம் 10 ரூபாய் கட்டணம் .

கட்டணம் வசூல் செய்யும் ஏழு கோவில்களில் இரண்டு கோவில்களை பிரபல டி.வீ.எஸ். நிறுவனம் பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது .

எனக்கு ஒன்று மட்டும் கடைசி வரை புரிய வில்லை!!
ஏன் இந்த கட்டண வசூல் ?
இறைவனை இல்லாதவர்கள் தரிசிக்க கூடாது என்றா ?
கோவில் வளர்ச்சிக்கு என்றா ?

விருப்ப பட்டவர்கள் தானாக காணிக்கை செலுத்த முன் வரும் போது ஏன் இந்த கட்டணம் ?

ஆந்திர மாநிலம் திருப்பதியில் கூட இலவச தரிசன சேவை என்று உண்டு.நம் தமிழக தென் மாவட்ட தென் திருப்பதியில் ஏன் இந்த வழிப்பறி?

Wednesday, October 13, 2010

குடும்ப படம்


உண்மைய சொன்னால் வழக்கு

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!
ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.
இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது.

இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!

நன்றி - தினமணி
இந்த கட்டுரையை வெளியிட்ட தினமணி நாளிதழ் மீது பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது .

Saturday, September 25, 2010

தடுப்பூசி பன்றிக் காய்ச்சல் நோயை தடுக்குமா ?

இதுவரை தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோயால் இறந்தவர் எண்ணிக்கை கிட்டத்தட்ட பத்து நபர்கள் .

இந்த நோயால் பாதிப்பு வராமல் தடுக்க தற்போது தடுப்பூசி போடப்படுகிறது

இதற்கு பரிந்துரை செய்தது எந்த மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானி ?

தடுப்பூசி திட்டத்துக்காக தமிழக அரசு ஒதுக்கிய தொகை 300 கோடி .

நாளிதழில் எதிர் கட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா விட்ட ஒரு அறிக்கைக்கு பதில் சொல்லும் விதமாக முதல்வர் உடனடியாக ருபாய் 300 கோடி தொகையை ஒதுக்கியதன் பின்னணி என்ன ?மக்கள் நலமா அல்லது அரசியலா ?

திட்டத்தால் பலன் அடைவது சாதாரண மனிதனா அல்லது மருந்து உற்பத்தி செய்யும் முதலாளிகளா ?

தமிழக சட்டசபையில் முதலில் விவாதிக்க வேண்டிய விஷத்தை எந்த விவாதமும் இல்லாமல் நடைமுறை படுத்த வேண்டிய அவசியம் என்ன ?

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எத்தனை சதவிகிதம் பேருக்கு நோய் வராது?

இதற்கு முன் திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மை ஊசி போட்ட நான்கு குழந்தைகள் இறந்ததுபோல்அசம்பாவிதங்கள் நடந்தால் யார் பொறுப்பு ஏற்பார்கள் ?தமிழக அரசா அல்லது மருந்து உற்பத்தி நிறுவனமா ?

தடுப்போசி போடும் முன் தங்களது குடும்ப மருத்துவரை ஆலோசனை செய்து கொள்வது நல்லது .

வாசகர்கள் தங்களது மேலான கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யவும்